Wednesday, March 17, 2010

கொத்தடிமை....

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக்
கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம்
"வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு
இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க ?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே
மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா
பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட
முடியுமா?
7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு
முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான்
கெளம்பனும்...

10) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப்
பக்கத்துல போக சொன்னது?
11) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
12) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு
தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
13) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
14) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

Thursday, March 4, 2010

பிரிவின் கணங்கள்.....தெற்கத்தி பையன் தூக்கம் அற்ற கண்கள்

பிரிவின் கணங்கள்.....

காற்றில் அறுந்த மேக
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து
செல்கிறது காலம்.....


கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..

பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....

இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....

ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்.....

Wednesday, March 3, 2010

நித்தியானத்தவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்களை குறிப்பிடுவர்... அரசு எப்போது எல்லாம் தவறு இழைக்கின்றதோ அப்போது எல்லாம் அதை தட்டிக் கேட்கும் தார்மீக கடமை இந்த ஊடகங்களுக்கு இருக்கின்றது. தமிழகத்தின் இன்றைய ஊடகங்கள் அவ்வாறு இருக்கின்றனவா என கேள்வி எழுப்பினால் மவுனமே நமக்கு பதிலாக கிடைக்கிறது.


அரசு தனது பதவியை தக்க வைத்து கொள்ள எப்போதும் பிரச்சனையின் வேரை பார்க்காமல் அதை எப்படி திசை திருப்புவது என்பதிலே தான் தன் கவனத்தை செலுத்துகிறது... சமீப காலத்தில் தமிழத்தில் சில முக்கியமான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்த போது அது சாமர்த்தியமாய் திசை திருப்பப்பட்டன. சோதித்து பார்க்க வேண்டும் என்றால் கடந்த ஓர் ஆண்டின் நாளிதழ்களை கொஞ்சம் புரட்டி பாருங்கள்...இரண்டு நாட்கள் முக்கியமாய் இருக்கும் செய்திகள் பின் காணாமல் போய் இருக்கும்.பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அப்பட்டமாய் அரசுக்கு துணை போவது தெரிய வரும்..

அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் கலவரம்:

அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஜர்கண்டை சேர்ந்த கெளதம் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்... 'தாமதமாய் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார்' என்று கூறி வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதில் இது வரை பல மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன.

பிரபல சாமியார் நித்தியானந்தாவின் லீலைகள்

தனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் சுவாமி நித்தியானந்தா. ஒரு நடிகையோடு நெருக்கமாக அவர் இருக்கும் வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆளும் கட்சியின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி ஒன்று.


இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.


சரி செய்தி 2 ல் இருந்து துவங்குவோம். சாமியார்கள் தான் இன்றைய தமிழகத்தின் சாபம்... ஆண்டவனின் அருளுரைகளை வழங்குகிறேன் பேர்வழி என மக்கள் மனங்களை கரைத்து இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல... பிரேமானந்தா துவக்கி வைத்த பட்டியல் இன்று நித்தியானந்தா வரை நீள்கிறது...
இந்தியாவில் தமிழகத்தில் உருவான பகுத்தறிவு சிந்தனையாளர்களை போல் வேறு எங்கும் உருவானதும் இல்லை, உருவாக போவதும் இல்லை.. இருப்பினும் இங்கே தான் மதத்தின் பெயரால் போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் குவிந்து கிடக்கின்றனர்..அந்த குவியலில் ஒருவர் தான் நித்தியானந்தா..


சரி பொது வாழ்வில் வந்து, ஆன்மீக வேடமிட்டு இது போன்று தவறு செய்யும் சாமியார்களை என்ன செய்யலாம்??? வேறு வழியே இல்லை, அரபு நாடுகளை போல் நடு ரோட்டில் நிக்க வைத்து 'நறுக்'


சரி செய்தி 1க்கு வருவோம்.... விபத்துகளில் அடிபட்டவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் சரிவர கவனிக்கப்படாமல் உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகவே இருக்கிறது. சக மாணவன் ஒருவன் தவறான சிகிட்சையாலோ இல்லையேல் சரியான சிகிச்சை கிடைக்காமலோ உயிர் இழக்க நேரிடும் போது மாணவர்களுக்கு ஏற்படும் துயரமும், பெரும்கோபமும் இயல்பானதே. உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மாணவர்களை சரியாக கையாள தெரியாத ஆளும் வர்க்கம் தனது அரசு ரவுடிகளை வைத்து அடித்து துரத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்... இதை விட ஒரு அரசின் கையாலாகாத தன்மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.. ஜனநாயகம் நாம் வாழும் சமூகத்தில் எத்தனை வன்மையாக நசுக்கபடுகிறது என்பதை பாருங்கள்.


ஆறு இந்தியர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கேட்ட உடனையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் ஆப்கானுக்கு சென்று உள்ளார். சொந்த நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் அதுவும் ஒரே பல்கலைகழகத்தில் பல வட இந்திய மாணவர்கள் அரசு ஊழியர்களால் அடித்து கொல்லப்பட்டிருகின்றனர். என்னவென்று கேட்க வேண்டிய மத்திய அரசோ மவுனம் சாதிக்கிறது...உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள்???


உண்மையாக நடந்த செய்திகளை வெளி கொண்டு வராமல் இருப்பது கூட பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதே.


ஒரு உண்மையை மறைக்கவே முன்பே தமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியும், ஒரு புலனாய்வு பத்திரிக்கையும்..


நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!